திருவண்ணாமலை, ஜன.5:
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கான நேர்முகத் தேர்வு நேற்று தொடங்கியது.
நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பணிபுரிய சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில், உடற்கல்வி 315, ஓவியம் 308, தையல் 50, இசை 50, கணினி 101, கட்டிடவியல் 40, வாழ்க்கைக்கல்வி 40, கட்டிடக்கலை (கொத்தனார்) 40 உட்பட 944 சிறப்பு ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதியுள்ள நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அதன்படி, சிறப்பு ஆசிரியர்களுக்கான நேர்முகத்தேர்வு நேற்று திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
முதன்மைக்கல்வி அலுவலர் நூர்ஜகான், அனை வருக்கும் கல்வி திட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கிரேஷ்பிராங்ளின், மாவட்ட கல்வி அலுவலர்கள் பத்ரு (தி.மலை) சண்முகம் (செய்யாறு), மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் ஜோசப் அந்தோணிராஜ் ஆகியோர் நேர் காணலை நடத்தினர்.
முதல் நாளான நேற்று உற்கல்வி சிறப்பு ஆசிரியர்களுக்கான நேர் காணல் நடந்தது. விண்ணப்பித்திருந்த 1,578 பேரில் உரிய கல்வித் தகுதியுள்ள 865 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
அதில், நேற்று 585 பேர் கலந்துகொண்டனர். இன்று 280 பேர் பங்கேற்கின்றனர். நாளை ஓவிய ஆசிரியர்களுக்கான நேர்காணல் நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து, 7ம் தேதி தையல் ஆசிரியர்களுக்கும், 9, 10ம் தேதிகளில் கணினி, வாழ்க்கைக் கல்வி உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் பணியிடங்களுக்கும் நேர்காணல் நடைபெறுகிறது.
நேர்முகத் தெர்வில் பெறும் மதிப்பெண்கள், வேலைவாய்ப்பு பதிவு முன்னுரிமை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களின் பட்டியல் வரும் 20ம் தேதிக்குள் வெளியாகும் என தெரிகிறது.
தி.மலை மாவட்டத்தில்
944 சிறப்பு ஆசிரியர்கள் நியமனம்
நேர்முகத் தேர்வு தொடங்கியது