தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பதவியிறக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, திருவண்ணாமலையில் நேற்று ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 2011 & 2012ம் கல்வி ஆண்டில் 710 நடுநிலைப்பள்ளிகள், உயர் நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இப்பள்ளிகளில் பணிபுரிந்த தலைமை ஆசிரியர்கள், பட்டாரி ஆசிரியர்கள் மாநிலம் முழுவதும் 3,600 பேர் திடீரென பதவியிறக்கம் செய்யப்பட்டனர். மேலும், இவர்களுக்கு ஊதிய இழப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பதவியிறக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு, உரிய தகுதியுள்ள பணியிடங்களை வழங்க வேண்டும், ஊதிய இழப்பை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று மாநில அளவில் கண்டன போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். அதன்படி, திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். மாநில மகளிர் அணி செயலாளர் ஆனந்தாயி, மாநில துணைப்பொதுச்செயலாளர் புருஷோத்தமன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
பதவியிறக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களை, தொடர்ந்து தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்ற அனுமதிக்க வேண்டும், ஊதிய இழப்பு ஏற்படாமல் அரசு தடுக்க வேண்டும், ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதியில் பல்வேறு மாவட்டங்களில் முறைகேடுகள் நடந்துள்ளது. அதை கண்டுபிடித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.