சென்னை:""பகுதி நேர ஆசிரியர்கள் நேர்முகத் தேர்வு மூலம், பதிவு மூப்பு, அனுபவம் போன்றவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, விரைவில் நியமிக்கப்படுவர்'' என, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி தெரிவித்தார்.கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:பாலபாரதி-மார்க்சிஸ்ட்: ஆசிரியர்கள் நியமனம் பற்றிய அறிவிப்புகள் வெளிவருகின்றன. அவர்களை முன்பு போல, பதிவு மூப்பு அடிப்படையில் நியமிப்பது தான் பொருத்தமாக இருக்கும். ஒரு மணி நேர ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம், தேர்வு என்று கூறுவது, பொருத்தமாக இல்லை. 60 லட்சம் பேர், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றனர். அந்த வேலை வாய்ப்பு அலுவலகங்களிலேயே, 358 காலியிடங்கள் உள்ளன.
பதிவு மூப்பு அடிப்படையில், ஆசிரியர்களை தேர்வு செய்வதன் மூலம், கல்வித் துறை ஆரோக்கியமாக செயல்பட முடியும்.அமைச்சர் சிவபதி: பகுதி நேர ஆசிரியர்களை, அந்தந்த மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அதிகாரி தலைமையில், ஆறு உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அவர்கள் முறையாக நேர்முகத் தேர்வு நடத்தி, தகுதி அடிப்படையில், விரைவில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். நேர்முகத் தேர்வில், பதிவு மூப்பு, கல்வித் தகுதி, அனுபவம் ஆகியவற்றுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, அதனடிப்படையில், நியமனம் செய்யப்படும்.கடந்த 25 ஆண்டுகளில், தமிழகத்தில், 1 லட்சத்து 3 ஆயிரத்து 350 ஆசிரியர்கள் தான் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்த அரசு இந்த ஆண்டு மட்டும், 56 ஆயிரத்து 450 ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளது.