சென்னை: தமிழகம், புதுச்சேரியில், பிளஸ் 2 செய்முறைத் தேர்வு, நாளை(பிப்.,2) துவங்குகின்றன. 4 லட்சத்து 92 ஆயிரத்து 248 மாணவர்கள், இத்தேர்வில் பங்கேற்கின்றனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 8ல் துவங்கி, 30ம் தேதி வரை நடக்கிறது. 7 லட்சத்து 60 ஆயிரத்து 965 மாணவர்கள், பொதுத்தேர்வை எழுதுகின்றனர். இவர்களில், அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு, நாளை துவங்குகிறது.
"பிப்.,2ம் தேதியில் இருந்து, 20ம் தேதிக்குள், செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்க வேண்டும்; மாணவர்கள் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், தேர்வு அட்டவணை தயாரித்து நடத்த வேண்டும்&'&' என, தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், செய்முறைத் தேர்வு அட்டவணை தயாரித்துள்ளனர்.
செய்முறைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, தேர்வு பதிவெண்கள் விவரப் பட்டியல் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. செய்முறைத் தேர்வை, 4 லட்சத்து 92 ஆயிரத்து 248 பேர் எழுதுகின்றனர்.
இரு கட்டங்களாக தேர்வு: சென்னை மாவட்டத்தில், இரு கட்டங்களாக, பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள் நடக்கின்றன. 2ம் தேதியில் இருந்து, 11ம் தேதி வரை ஒரு கட்டமாகவும், 13ம் தேதியில் இருந்து, 18ம் தேதி வரை ஒரு கட்டமாகவும் நடக்கின்றன. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், இதில் பங்கேற்கின்றனர்.
பிளஸ் 2 செய்முறைத் தேர்வு, 50 மதிப்பெண்களுக்கும், எழுத்துத் தேர்வு, 150 மதிப்பெண்களுக்கும் நடைபெறும். அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற, செய்முறைத் தேர்வில், 40 மதிப்பெண்களும், எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம், 30 மதிப்பெண்களும் பெற வேண்டும்.