திருச்சி: திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில், சிறப்பு ஆசிரியர்கள் பரிந்துரைக்கான பதிவுமூப்பினை, வரும் 23ம் தேதி சரிபார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் ஜெயஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடங்களான, உடற்கல்வி, தையல் மற்றும் ஓவிய ஆசிரியர் பணிகளுக்கு, வேலைவாய்ப்பு அலுவலகத்தால் பரிந்துரை செய்யப்பட உள்ளது.
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுச்செய்துள்ள, அனைத்து உடற்கல்வி, தையல் மற்றும் ஓவிய ஆசிரியர்களது பதிவு விபரங்கள் அலுவலக விளம்பர பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.
தகுதி வாய்ந்த 31.12.2011ம் தேதி வரை பதிவுச் செய்துள்ள அனைத்து பொது மனுதாரர்களும், 13.1.2012ம் தேதி வரை பதிவுச் செய்துள்ள அனைத்து முன்னுரிமை பிரிவு மனுதாரர்களும், இப்பட்டியலை வரும் 23ம் தேதி வரை சரிபார்க்கலாம்.
தங்களது பெயர் விடுபடாமல் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதா? என்பதை உறுதிக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.