கோவை: விதிமுறைப்படி போதுமான பதிவு மூப்பு இல்லாதவர்கள், ஆசிரியர் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, சீனியர் பி.எட்., ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஆசிரியர் பயிற்சி பெற்று, வேலை வாய்ப்பு அலுவலகத்தில், காத்திருப்போர் சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் ராமச்சந்திரன் கூறியுள்ளதாவது: ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு, சத்துணவுத் திட்டத்தின் கீழ், 2003ல் சிறப்பு தேர்வு நடத்தப்பட்டது. இதில், 650 பேருக்கு ஆசிரியர் வேலை வழங்கப்பட்டது. ஆனால், கடந்த தி.மு.க., ஆட்சியில், விதிகளை மீறி முறைகேடாக, 140 பேர் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2008 முதல் 2011 மே மாதம் வரை, சத்துணவுத் திட்டத்தில் அனுமதியோ, விடுமுறையோ எடுக்காமல், ரெகுலர் ஆக பி.எட்., மற்றும் ஆறு மாத புலவர் பண்டிட் பயிற்சி பெற்றவர்களின் பெயர்கள், இந்த பட்டியலில் இடம் பெறவில்லை.
வேலை வாய்ப்பு அலுவலகத்தில், பதிவுசெய்து, 25 ஆண்டுகளாக காத்திருக்கிறோம். ஆனால், எங்களுக்கு வாய்ப்பு வழங்காமல், சத்துணவு திட்டத்தில் குறுக்கு வழியில் ஆசிரியர் பணி பெறும் நிலை உள்ளது. இந்த நிலையை மாற்றி, 2006க்கு முன் பி.எட்., மற்றும் பண்டிட் பயிற்சி பெற்றவர்களுக்கு மட்டுமே, ஆசிரியர் பணி வழங்க வேண்டும். தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள, 140 பேர் பட்டியலிலும், இதே நடைமுறையை பின்பற்ற, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, ராமச்சந்திரன் கூறியுள்ளார்.