ஈரோடு: ஈரோடு மாவட்ட அளவிலான காலாண்டுக்கான வங்கியாளர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட திட்ட இயக்குனர் வித்யாசாகர் தலைமை வகித்தார்.
மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வெங்கடரமணன், காலாண்டில் வங்கியாளர்கள் செயல்பாடுகள் குறித்த விபரங்களை சமர்பித்து பேசுகையில், "2011 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதத்தில், ஈரோடு மாவட்டத்தில் வழங்கிய கல்விக் கடன் அளவு 83 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மாநகராட்சி எல்லை விரிவுபடுத்தப்பட்டு 60 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. புதிய வார்டு பகுதிகள் வங்கிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது. புதிய பட்டியல் ஜனவரி 2012 முதல் அமலுக்கு வருகிறது. வங்கியாளர்கள் நிலுவையில் உள்ள கல்விக்கடன் விண்ணப்பங்களை விரைந்து பரிசீலிக்க வேண்டும்" என்றார்.
திட்ட இயக்குனர் வித்யாசாகர், "2009 - 10ம் ஆண்டுக்கான பல்வேறு அரசு திட்டம், கடன் விண்ணப்பங்கள் பல வங்கிகளில் இன்னமும் நிலுவையில் உள்ளது. வங்கி விரைவாக அவற்றை முடிக்க வேண்டும்" என்றார்.
சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள், வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து பேசி, எதிர்பார்ப்புகளை தெரிவித்தனர். கனரா வங்கியின் சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்குனர் கல்யாணகிருஷ்ணன், "ஈரோட்டில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச சுயவேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அதிகமானோருக்கு பயிற்சியளிக்க மாவட்ட நிர்வாகம் உரிய உதவிகளை செய்ய வேண்டும். பயிற்சி நிலையத்துக்கு கட்டிடம் கட்டுவதுக்கு மாவட்ட நிர்வாகம் நிலம் ஒதுக்கி, கட்டிடம் கட்டுவதுக்கு மாவட்ட நிர்வாகம் மேலும் உதவிகளை செய்ய வேண்டும்" என்றார்.
இதற்கு பதிலளித்த திட்ட இயக்குனர், "பயிற்சி நிலையத்துக்கு சொந்த கட்டிடம் கட்டி, பயிற்சிகளை அளிப்பதுக்கு தேவையான உதவிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.