தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால், மாற்றுப்பணியில் செல்லும் ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் சார்பில், 710 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இந்த பள்ளிகளில், இந்த கல்வியாண்டு முதல் மாணவர்கள் சேர்க்கை நடத்த, பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வெளியிடங்களில் படிக்கும் மாணவர்கள், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டனர். நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வில் உயர்நிலைப்பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதனால் போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம்,கணிதம், அறிவியல், சமூக அறிவியல், தலைமையாசிரியர் உட்பட ஆறு ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நடுநிலைப்பள்ளிகளில் இருந்த பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டாலும், போதுமான ஆசிரியர் இல்லாத நிலை உள்ளது. அருகில் உள்ள பள்ளி ஆசிரியர்களை, மாற்றுப்பணியில் வாரத்தில் 2 முதல் 3 நாட்கள் வரை பாடம் எடுக்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. மாணவர்களோ முழுமையாக ஆசியர்கள் இல்லாத நிலையில் பாதிக்கின்றனர். புதிய ஆசிரியர்களை விரைவில் நியமிக்க அரசு முன் வர வேண்டும்.