Saturday, January 14, 2012

லஞ்சப் பணம் கொடுத்து டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்வானவர்கள்

லஞ்சப் பணம் கொடுத்து டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்வானவர்கள், தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருப்பவர்கள் என, தமிழகம் முழுவதும் 70க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளில் நேற்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி, ஆவணங் களை கைப்பற்றியுள்ளனர். தமிழக அரசில் பல்வேறு பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களில் குறிப்பிட்ட சிலர், தேர்வாணையத் தலைவர், உறுப்பினர்களை கவனித்து, அதற்கான பட்டியலுக்குள் நுழைந்து விடுவதாகபுகார்கள் அவ்வபோது எழுந்து வருகின்றன. சமீபத்தில் தான் இவ்வாறான புகார்களுக்கு விடிவுகாலம் பிறந்துள்ளது. குறிப்பாக, உதவி பல் மருத்துவர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் பெயர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன், பார்வையிடக் கோரியது; 2006 முதல் 2008ம் ஆண்டுக்கான மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு நடந்த தேர்வில், தகுதியற்றவர்களை தேர்வு செய்து ஊழல் புரிந்தது; குரூப்-1 அலுவலர் தேர்வுகளில் லஞ்ச லாவண்யங்களில் ஈடுபடாமல் தடுக்க முயன்ற, டி.என்.பி.எஸ்.சி., செயலரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட புகார்களின் மேல், லஞ்ச ஒழிப்புத் துறையில் வழக்கு பதியப்பட்டது. தலைவர், உறுப்பினர் வீடுகளில்... வழக்கிற்கு தேவையான ஆவணங்களை ஆய்வு செய்வதற்கு, அவற்றை சமர்ப்பிக்கும் படி, லஞ்ச ஒழிப்புத் துறை கேட்டுக் கொண்டது. டி.என்.பி.எஸ்.சி., தலைவர் மற்றும் உறுப்பினர்கள்,இவற்றை ஆஜர்படுத்த மறுத்துவிட்டனர். இதையடுத்து, அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும் வழக்கு பதியப்பட்டது. வழக்கு விசாரணை துவங்கிய நிலையில், கடந்தாண்டு அக்டோபர் 14ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் செல்லமுத்து மற்றும் உறுப்பினர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு, ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. தேர்வாணைய ஊழியர்கள், புரோக்கர்கள்... தொடர்ந்து, இவ்வழக்கில் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு உதவிகரமாகச் செயல்பட்டதாகக் கருதப்பட்ட தேர்வாணையத்தின் சார்பு செயலர்கள், உதவிப் பிரிவு அலுவலர்கள் என பலரது வீட்டில் கடந்தாண்டு நவம்பர் மாதம் 18ம் தேதி சோதனை

நடத்தப்பட்டு, பணம், தேர்வானவர்கள் பட்டியல், மதிப்பெண் சான்று உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து, இந்த விவகாரத்தில் இடைத்தரகர்களாகச் செயல்பட்ட, பயிற்சி நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் சிலரது வீடுகள், அலுவலகங்களில் கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி, சோதனை நடத்தப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 73 இடங்களில்... இவற்றையடுத்து, பணம் கொடுத்து தேர்வானவர்கள், தேர்வு எழுதி முடிவிற்காக காத்திருப்பவர்கள் வீடுகளில் ரெய்டு நடத்த, லஞ்ச ஒழிப்புத் துறை முடிவெடுத்தது. நேற்று காலை, சென்னை, மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில், 73 பேரது வீடுகளில், டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர். இதில், மதுரையில் 13 பேர் மற்றும் சென்னையில் 10 பேர் வீடுகள் அடக்கம். சோதனை பட்டியலில் இடம் பெற்றவர்களில் 53 பேர், ஏற்கனவே குரூப்-1 மற்றும் குரூப்-2 தேர்வுகளில் பங்கேற்று தேர்வாகி, அரசு டாக்டர், டி.எஸ்.பி., டி.ஆர்.ஓ., மற்றும் தலைமைச் செயலகப் பணிகளில் உள்ளனர். இவர்கள் வீடுகளிலும், கடந்த இரண்டாண்டுகளில் நடத்தப்பட்ட குரூப்-1, 2 தேர்வுகளை எழுதி காத்திருப்போரும் அடக்கம். இவர்கள் அனைவரும், தங்கள் விடைத்தாள்களில் சில குறியீடுகளை பதிவு செய்து, அதன் மூலம் மதிப்பெண்கள் அதிகளவில் பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனையைத் தொடர்ந்து, இவர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், விரைவில் பதவி நீக்கம் செய்யப்படலாம் என்ற கருத்தும் உள்ளது. செல்லமுத்து ராஜினாமா... லஞ்ச ஒழிப்புத்
துறையினரின் இந்த சோதனைகளுக்கிடையில், டி.என்.பி.எஸ்.சி., தலைவர் செல்லமுத்து, தனது பதவியை ராஜினாமா செய்து, கடிதம் அனுப்பியுள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறையினர் செல்லமுத்துவின் வீட்டில் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு அதிகாரம் இல்லை என்று அவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், கடந்தசில தினங்களுக்கு முன், அவர் தன் ராஜினாமா கடிதத்தை, அரசுக்கு அனுப்பியதாகவும், அக்கடிதம் தற்போது ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
செல்லமுத்துவின் பதவிக்காலம், வரும் மே மாதத்துடன் முடியும் நிலையில், நான்கு மாதங்களுக்கு முன் ராஜினாமா செய்துள்ளார். அரியலூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ஆர்.செல்லமுத்து, கடந்த தி.மு.க., ஆட்சியில், 2010 ஜன., 4ல், டி.என்.பி.எஸ்.சி., தலைவராக நியமிக்கப்பட்டார். விதிகளின்படி, ஆறாண்டுகள் அல்லது 62 வயது, இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை, பதவியை வகிக்கலாம். அதன்படி, செல்லமுத்துவுக்கு 62வது வயது, வரும் மே மாதத்துடன் முடிகிறது. ஊழல் புகார் எதிரொலி காரணமாக, நான்கு மாதங்களுக்கு முன் ராஜினாமா செய்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் தொடர்ச்சியான ரெய்டு மற்றும் அதிரடி நடவடிக்கைகளால், விரக்தியடைந்து பதவியை ராஜினாமா செய்ததாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இவரைத் தொடர்ந்து, உறுப்பினர்களும் வரிசையாக ராஜினாமா செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
Disqus Comments

Label

D.T.Ed. Exam Results health Syllabus download INSPECTORS OF MATRICULATION SCHOOLS - TAMIL NADU Music Special Teachers-Sewing SSLC Special Supplementary Examination June / July 2012 Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) – 2012 Tamil Nadu Teachers Eligibility Test 2013 Mark List for Paper II and Paper II Technical Exam 2014 TET TET 2012 Syllabus TET மாதிரி வினாத்தாள் tnpsc group 4 answer key 2012 tnpsc group 4 question and answer ஆசிரியர் பயிற்சி தனித்தேர்வு: 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் ஆசிரியர்கள் நியமனம் இனிமேல் "ஆன்-லைன்'னில் தான் விண்ணப்பிக்க வேண்டும் உங்கள் பள்ளி கல்வி உதவித்தொகை கல்விச்செய்தி குரூப் - 1 தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு குரூப்-2: ஜூலை 20 முதல் 23 வரை நேர்முகத் தேர்வு சிறப்பாசிரியர் தேர்வு சிறப்பு தேர்வுக்கு செய்தி டி.இ.டி. டி.என்.பி.எஸ்.சி தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை தேர்வு தேர்வுகள் பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான அட்டவணை பிளஸ் 2 உடனடி தேர்வுக்கு தத்கால் திட்டம் அறிவிப்பு பிற செய்திகள்

Archive