சென்னை தமிழகத்தில் நடந்த பாலிடெக்னிக் இறுதித் தேர்வில் தோல்வி அடைந்த 91 ஆயிரம் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத தொழில்நுட்ப கல்வித்துறை வாய்ப்பளித்துள்ளது.
அரசு, அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் என்று மொத்தம் 450 பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இந்த பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்த மாணவ, மாணவியர்கள் இறுதித் தேர்வில் தேர்ச்சி அடையாதவர்களுக்கு கல்லூரி படிப்பு முடித்த பின்பு 3 ஆண்டுகள் வரை தேர்வெழுத வாய்ப்பு தரப்படும்.
இந்த வாய்ப்பிலும் வெற்றிபெற முடியாத மாணவர்களுக்கு கோரிக்கை அடிப்படையில் மீண்டும் தேர்வு எழுத அரசு சார்பில் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அதன்பிறகு தேர்வெழுத அனுமதி வழங்கப்படமாட்டாது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 6500 மாணவ, மாணவர்களில் தேர்வெழுத பதிவுசெய்து அதில் 2919 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். எனவே தேர்வில் தேர்ச்சி சதவீதம் மிகக் குறைந்த அளவே இருந்தது என்று ஆய்வில் தெரிகின்றது.
பல்வேறு காரணங்களால் இறுதித் தேர்வில் தேர்ச்சி அடைய முடியாதவர்களுக்கு கருணை அடிப்படையில் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கினால், அவர்கள் தேர்ச்சி அடைந்து, மேலும் படிப்பதற்கோ அல்லது வேலை வாய்ப்புகளில் சேர்வதற்கோ உதவியாக இருக்கும் என தமிழக அரசு, தொழில்நுட்ப கல்வித்துறை வாரியத்திடம் கேட்டுக் கொண்டது.
இந்த இறுதித் தேர்வில் சுமார் 91 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள ஒவ்வோரு பாடத்திற்கும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.