அரசு உதவிபெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூரில் கடந்த 8ம் தேதி நடந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. அதன்படி, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, திருப்பூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் சங்கங்கள் சார்பில், ஈரோடு காளை மாட்டு சிலை அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
கல்லூரி நிர்வாகங்கள், தன்னிச்சையாக வேண்டுமென்று ஆசிரியர்கள் மீது எடுக்கும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். பணியில் இருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பணிப்பாதுகாப்பு உறுதி செய்ய அரசாணை வெளியிட வேண்டும்.
கல்வியாண்டின் இறுதிவரை அரசினால் அனுமதிக்கப்பட்டும் மீள பணி உரிமையை உறுதி செய்ய வேண்டும். சிக்கய்ய நாய்க்கர் கல்லூரியை, அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும். அரசு உதவிபெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தினர்.
பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் மண்டலத் தலைவர் பசுபதி தலைமை வகித்தார். மண்டல செயலாளர் சண்முகசுந்தரம் வரவேற்றார். முன்னாள் மாநில தலைவர் செந்தாமரை முன்னிலை வகித்தார். பல்வேறு சங்கத்தினர் பங்கேற்றனர். மண்டல பொருளாளர் மனோகரன் நன்றி கூறினார்.