8,462 ஆசிரியர்கள் நியமனம்: அரசாணை வெளியீடு
02 Jan 2012 07:20,
(02 Jan) சென்னை: புதிதாக, 8,462 ஆசிரியர்கள் நியமனங்கள் அறிவிப்பிற்கு, முன் தேதியிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த 29ம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், "அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஒரு ஆசிரியருக்கு, 40 மாணவர்கள் வீதம், அனைவருக்கும் இடைக்கல்வித் திட்டத்தின் கீழ் கூடுதலாக தேவைப்படும், 6,872 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 1,590 முதுகலை ஆசிரியர் இடங்கள், புதிதாக தோற்றுவிக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டது. இந்தப் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளித்து, கடந்த மாதம் 23ம் தேதியிட்ட அரசாணை வெளியிடப்பட்டது. பள்ளிக் கல்வி இயக்குனர், 3,187 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு, ஒப்புதல் கோரியுள்ளார். ஆனால், நடப்பு கல்வியாண்டில், 50 சதவீத இடங்களுக்கு மட்டும் அரசாணையில் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், மீதமுள்ள 1,597 இடங்களுக்கு, அடுத்த கல்வியாண்டில் தமிழக அரசு ஒப்புதல் அளிக்கும் என்றும், பள்ளிக்கல்வி இயக்குனரக வட்டாரங்கள் தெரிவித்தன.