சென்னை: தரம் உயர்த்தப்பட்ட 1,049 நடுநிலைப் பள்ளிகளில் புதிதாக, 1,267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி, ஆசிரியர்களை நியமிக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த பணியிடங்கள் இந்த ஆண்டுக்குள் உருவாக்கப்படும். இந்த அறிவிப்பால், கிராமப்புற பள்ளிகளுக்கு, ஆசிரியர்கள் அதிகளவில் நியமிக்கப்பட உள்ளனர்.
பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், புதிய ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கவும் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த ஆட்சி பொறுப்பேற்ற பின், இதுவரை 55 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில், 16,549 பகுதி நேர ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, தற்போது ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். மற்ற ஆசிரியர் பணியிடங்களை பொறுத்தவரை, போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்களா அல்லது பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்களா என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அவ்வாறு போட்டித் தேர்வு மூலம் நியமிக்கப்பட்டாலும், இடைநிலைக் கல்வி சட்டப்படி, அந்த ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுதி, ஆசிரியராக நியமிக்கப்பட தகுதி பெற்றிருக்க வேண்டும்.
இது தொடர்பான பணிகளை, ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிக்கக் கூடும். இந்நிலையில், இப்போது தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்குவதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு காரணமாக, கிராமப்புற நடுநிலைப் பள்ளிகளில் அதிகளவு ஆசிரியர்கள் இடம் பெற உள்ளனர். இது, கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இந்த அரசு பதவியேற்ற பின், பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் அடிப்படையில், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், 2009ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட, 831 நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா, ஒரு ஆசிரியர் வீதம், 831 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கவும், 2010-2011ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட, 218 நடுநிலைப் பள்ளிகளுக்கு, பள்ளி ஒன்றுக்கு, இரண்டு ஆசிரியர்கள் வீதம், 436 ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம், 1,267 பணியிடங்களை புதிதாக உருவாக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த புதிய பணியிடங்கள், இந்த கல்வியாண்டிலே உருவாக்கப்பட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
அரசு உத்தரவு குறித்து நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சுப்பிரமணியன் கூறும் போது, புதிதாக ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. ஆனால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்ய, அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசின் விதிக்குட்பட்டு, தகுதித் தேர்வு நடத்தி ஆசிரியர்களை தேர்வு செய்வதா அல்லது இப்போதைக்கு மாநிலத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு மட்டும் போதுமா என்பதில் முடிவு எடுக்கப்படவில்லை. இதில் விரைவில் முடிவு எடுத்து, காலியாக உள்ள இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்,&'&' என்றார்.
பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான சாய்வு மேஜை, நீள் இருக்கை, மேஜை, நாற்காலி முதலான இருக்கை வசதிகளை ஏற்படுத்த, 36 கோடியே 17 லட்சம் ரூபாய் ஒதுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.