தமிழகத்தில், சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ், 11 லட்சத்து, 55 ஆயிரத்து, 187 மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதுகின்றனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதும் மாணவ, மாணவியரின் முழு விவரங்களை, மாவட்ட வாரியாக பெற்று, தற்போது தேர்வெழுதும் மாணவர்களின் எண்ணிக்கையை, அரசு தேர்வுத் துறை இறுதி செய்துள்ளது.
அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள், சுயநிதியில் இயங்கும் பள்ளிகளில் இருந்து, 9 லட்சத்து, 87 ஆயிரத்து, 225 மாணவர்களும், மெட்ரிக் பள்ளிகளில் இருந்து, 1 லட்சத்து, 67 ஆயிரத்து, 962 மாணவர்களும் தேர்வை எழுதுகின்றனர்.
ஒட்டு மொத்தத்தில், மாணவர்கள் எண்ணிக்கை, 6 லட்சத்து, 22 ஆயிரத்து, 377 ஆகவும், மாணவியர் எண்ணிக்கை, 5 லட்சத்து, 32 ஆயிரத்து, 810 ஆகவும் உள்ளது. மாணவிகளை விட, 89 ஆயிரத்து, 567 மாணவர்கள் கூடுதலாக தேர்வெழுதுகின்றனர். புதுச்சேரி மாணவர்கள் எண்ணிக்கை குறித்த விவரம், இன்னும் பெறப்படவில்லை. எனினும், 25 ஆயிரம் மாணவர்கள் வரை, அங்கு தேர்வெழுதுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு என, எந்த தேர்வு முடிவுகளாக இருந்தாலும் சரி, விழுப்புரம் மாவட்டத்திற்கு மட்டும் எப்போதும் கடைசியிடம் தான் கிடைக்கிறது. ஆனால், தேர்வெழுதும் மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை, இந்த மாவட்டம் தான் முன்னிலை வகிக்கும்.
பத்தாம் வகுப்பு தேர்வில், அதிகபட்சமாக, இந்த மாவட்டத்தில் மட்டும், 1 லட்சத்து, 30 ஆயிரத்து, 267 மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். மிகக் குறைந்தபட்சமாக, பெரம்பலூர் மாவட்டத்தில், 9,140 மாணவர்கள் எழுதுகின்றனர்.