ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் அரசு பதில் அளிக்க நீதிபதி நோட்டீசு அனுப்பியுள்ளார்.
தமிழக பதிவு மூப்பு பட்டதாரி, முதுநிலை பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரத்னகுமார் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:
பட்டதாரிகள் மற்றும் இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப 2007ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பெயர் பதிவு செய்து காத்திருப்போரை அழைத்து நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. இதில் 6,359 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் சான்றிதழ் சரி பார்க்கப்பட்டது. ஆனால், நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதை பின்பற்றி தமிழக அரசு கடந்த நவம்பர் 8ம் தேதி புதிய அரசாணை வெளியிட்டது. அதில், கடந்த 2007ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை திரும்ப பெறுவதாக அறிவித்தது. தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளதால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து கடந்த 20 ஆண்டுகளாக காத்திருப்பவர்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படும். எனவே தகுதி தேர்வு எழுதியவர்களை தான் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். இது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு ரத்னகுமார் வழக்கில் கூறியுள்ளார்.
இந்த வழக்கை நீதிபதி சுகுணா விசாரித்து, வழக்கில் தமிழக கல்வித் துறை செயலாளர் 2 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.