அனை வருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் 710 ஊராட்சி ஒன்றிய, மாநகராட்சி, நகராட்சி, நலத்துறை நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி, கடந்த 7ம் தேதி அரசு உத்தரவிட்டது. (அரசாணை நிலை எண்:198). இந்த பள்ளிகளில் 5 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 3,550 பணியிடங்களும் ஏற்படுத்தப்பட்டன.
மேற்கண்ட தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் கவுன்சலிங், கடந்த 21 மற்றும் 22ம் தேதி நடந்தது.
நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதால், பணியிடம் இல்லாத அப்பள்ளிகளில் (நடுநிலைப்பள்ளி) தலைமை ஆசியர்களுக்கு பணியிடம், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றி, உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஈர்த்துக் கொள்ளப்படாத பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிடம் வழங்குவது, தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு ஆகியவை, அந்த கவுன்சலிங்கில் வழங்கப்பட்டன. ஆனால் 950 பேர் பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தரம் உயர்த்தப்படுகின்ற நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றிய தலைமை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளிக்கு செல்ல விருப்பம் தெரிவிக்கவில்லை என்றால், அவர்களுக்கு நடுநிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் வழங்க வேண்டும். அப்படி நடுநிலைப் பள்ளிக்கு அவர்களை கொண்டு வரும்போது, அந்த பள்ளிகளில் பணியாற்றும் ஜூனியர்கள் (தலைமை ஆசிரியர்கள்) கீழிறக்கி தொடக்கப் பள்ளிகளில் தலைமை ஆசிரியராக கொடுக்க வேண்டும்.
ஆனால் 21 மற்றும் 22ம் தேதிகளில் நடந்த கவுன்சலிங்கில் அப்படி வழங்காமல், 950 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கு பதிலாக 300 பேருக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கியிருக்கின்றனர். கல்வி அதிகாரிகளின் இந்த செயலால், தலைமை ஆசிரியர்கள் வேதனை அடைந்துள்ளனர். ஏற்கெனவே தொடக்கப் பள்ளிகளில் 1,054 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 1,267 பட்டதாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை எல்லாம் கல்வி அதிகாரிகள் மறைத்துள்ளனர்.
நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றிய தலைமை ஆசிரியர்கள் விருப்பம் தெரிவித்தால், அவர்கள் உயர்நிலைப் பள்ளிக்கு பட்டதாரிகளாக ஈர்க்கப்பட வேண்டும், ஆனால் விழுப்புரம், தஞ்சாவூர், கடலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், ஆகிய மாவட்டங்களில் விருப்பம் தெரிவித்தவர்களுக்கு பணியிடம் வழங்கவில்லை. சத்திய மங்கலத்தில் இருந்து 17 கிமீ தொலைவில் உள்ள மல்லியம்மன் துர்க்கம் பள்ளி மலைப்பகுதியில் உள்ளது. இங்கு, இதுவரை பெண்கள் நியமிக்கப்படவில்லை. ஆனால், தற்போது நடந்த கவுன்சலிங்கில் ஒரு பெண் ஆசிரியரை அந்த கிராமத்துக்கு மாற்றம் செய்துள்ளனர்.
இந்த கவுன்சலிங்கில் பல குளறுபடிகள் நடந்துள்ளன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், தொடக்கக் கல்வி அலுவலர்களை கேட்டால், அவர்களை அந்த அதிகாரிகள் மிரட்டியுள்ளனர். இதனால், சில ஆசிரியர்கள் அந்த கவுன்சலிங் நேரத்தில் கதறி அழுதுள்ளனர்.
வசதி இருப்பவர்களுக்கு வேண்டிய இடம் வழங்கப்பட்டதாகவும் ஆசிரியர்கள் குமுறுகின்றனர். இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அவரை நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.
Thanks : http://epaper.dinakaran.com/index.php?rt=index/frontpage/20111224/0b
Thanks : http://epaper.dinakaran.com/index.php?rt=index/frontpage/20111224/0b