15ல் எஸ்.எஸ்.எல்.சி தனித் தேர்வு: ஹால் டிக்கெட் வினியோகம்
எஸ்.எஸ்.எல்.சி/ ஓ.எஸ்.எல்.சி/ ஆங்கிலோ இந்தியன் பொதுத் தேர்வுகள் வரும் 15ம் தேதி முதல் 26ம் தேதி வரையிலும், மெட்ரிக்குலேஷன் தேர்வுகள் வரும் 15ம் தேதி முதல் 29ம் தேதி வரையிலும் நடக்கிறது. தேர்வுகள் கால அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி காலை 10 மணி முதல் 12.45 மணி வரை நடக்கிறது. இத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள அனைத்து தனித் தேர்வர்களுக்கும் வரும் 13ம் தேதி வரை ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.
குமரி மாவட்டத்தில் இரணியல் அரசு மேல்நிலைப் பள்ளி, மார்த்தாண்டம் எல்.எம்.எஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில் சிறுமலர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர் கன்கார்டியா மேல்நிலைப் பள்ளி, தென்காசி மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, நெல்லை டவுன் சாப்டர் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி பாரதியார் வித்யாலயா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.
எஸ்.எஸ்.எல்.சி/ஓ.எஸ்.எல்.சி/மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் தேர்வுக்கு விண்ணப்பித்து ஹால் டிக்கெட் கிடைக்க பெறாதவர்கள் உடனடியாக "அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகம், சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை, அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், நெல்லை- 1" என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ள வேண்டும்.
ஹால் டிக்கெட் இல்லாதவர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.தேர்வுக்கு பின்னர் தேர்வு மையங்களில் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களை நேரில் சென்று பெற இயலாதவர்கள் தங்களது சுய முகவரியிட்ட உறையில் 30 ரூபாய்க்கான ஸ்டாம்ப் ஒட்டி உறையை தேர்வு எழுதும் நாளில் தேர்வுக் கூட கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் கமலா தெரிவித்தார்.