மேட்டூர்: பிளஸ் 2 தேர்வில் சாதித்த மாணவி, வறுமை காரணமாக கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மேட்டூர் தாலுகாவில் உள்ள மலையடிவார கிராமத்தைச் சேர்ந்த அந்த மாணவிக்கு உதவ விரும்புபவர்கள், 84891 50320 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, கொளத்தூர் அடுத்த பச்சபாலமலை அடிவாரம் கத்திரிபட்டி கிராமத்தில் வசிக்கும் கூலி தொழிலாளி சின்னகுழந்தை மகள் கவிதா.
எட்டாம் வகுப்பு வரை கத்திரிபட்டி அரசு நடுநிலைபள்ளியில் படித்த கவிதா, அடுத்து, கொளத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்தார். எஸ்.எஸ்.எல்.சி.,யில், 426 மதிப்பெண் பெற்ற கவிதா, மேட்டூர் தனியார் பள்ளியில் பிளஸ்1 சேர்ந்தார். பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த மாதம் வெளியானது. இதில், கவிதா தமிழில் 187, ஆங்கிலத்தில் 167, கணிதத்தில் 197, இயற்பியலில் 186, வேதியியலில் 198, உயிரியலில் 184 என மொத்தம், 1,119 மதிப்பெண் பெற்றார். மேற்படிப்பு படிக்க வைக்க வசதி இல்லாததால், கவிதாவுக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்கின்றனர்.
இன்ஜினியரிங் கட்-ஆப் 194.5 இருப்பதால், கண்டிப்பாக உயர்கல்வி பயில வேண்டும் என்பதில் கவிதா உறுதியாக இருக்கிறார். வறுமை காரணமாக மகளை மேற்கொண்டு படிக்க வைக்க முடியாததால் பெற்றோர் தவிக்கின்றனர்.
இதுகுறித்து கவிதா கூறுகையில், ""எனக்கு இன்ஜினியரிங் படிக்கவே விருப்பம். ஆனால், வறுமை காரணமாக பெற்றோர் திருமணம் செய்ய வற்புறுத்துகின்றனர். உயர்கல்விக்கு யாரேனும் உதவி செய்தால் நிச்சயம் சிறப்பாக படித்து, என்னால் இயன்ற உதவியை மற்றவர்களுக்கு செய்வேன்,'' என்றார்.