சென்னை: குரூப்-4 தேர்வுக்கு ஏற்கனவே இணையதளம் வழியாக விண்ணப்பித்த தேர்வர்கள், தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தை, 8ம் தேதி வரை நீட்டிப்பு செய்து, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர் மற்றும் வரைவாளர் ஆகிய பணியிடங்களில், 10 ஆயிரத்து 718 பேரை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வு, அடுத்த மாதம் நடக்கிறது.
குரூப்-4 நிலையில் நடக்கும் இத்தேர்வை, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் எழுதலாம். இத்தேர்வுக்கு, நேற்றைய நிலவரப்படி 12 லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். இணையதளம் வழியாக ஏற்கனவே விண்ணப்பித்து, தேர்வுக் கட்டணத்தை மட்டும் செலுத்தாத விண்ணப்பதாரர்கள், ஜூன் 6க்குள் (இன்று) விண்ணப்பத்தை செலுத்த வேண்டும் என, தேர்வாணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், விண்ணப்பதாரரின் நலன் கருதி, தேர்வுக் கட்டணம்
செலுத்துவதற்கான கடைசி தேதியை, ஜூன் 8 வரை நீட்டிப்பு செய்துள்ளதாக, தேர்வாணைய செயலர் உதயசந்திரன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கட்டணம் செலுத்தியவர்கள், தங்களது விண்ணப்பத்தின் நிலை மற்றும் பணம் செலுத்திய விவரத்தினை, www.tnpscexams.net என்ற இணையதளத்தில், தேர்வுக் கட்டணம் நிலை என்ற பகுதியைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம் எனவும் செயலர் தெரிவித்துள்ளார்.