பள்ளிக் கல்வித்துறையில், இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அதிகளவில் நியமனம் செய்யப்படும்போது, உடற்கல்வி ஆசிரியர் நியமனத்திற்கு மட்டும் உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள 21, 500 நடுநிலைப் பள்ளிகளில், வெறும் 70 உடற்கல்வி ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். அ.தி.மு.க., அரசு வந்ததில் இருந்து, இதுவரை 60 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் இல்லாத பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை வெறும் 1,077ஆக உள்ளது.
தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கத்தின் தலைவர் சங்கரப்பெருமாள் கூறியதாவது: பள்ளியில் உடற்கல்விக்கு முக்கியத்துவம் இல்லாத நிலையையும், உடற்கல்வி ஆசிரியர் நியமனத்தில் உள்ள பாரபட்ச நிலையையும் தமிழக அரசு உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
உடற்கல்வி ஆசிரியர் நிலை குறித்து, உடற்கல்வி ஆசிரியர் சங்கம் வெளியிட்ட புள்ளி விவரம்:
23 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில், உடற்கல்வி ஆசிரியர்களே கிடையாது. 21,500 நடுநிலைப் பள்ளிகளில் வெறும் 70 உடற்கல்வி ஆசிரியர்கள் தான் இருக்கின்றனர். 7,200 உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் 5,400 உடற்கல்வி ஆசிரியர்கள் தான் பணிபுரிகின்றனர். ஒரு பள்ளிக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்ற நிலைகூட இல்லை. 3,700 மேல்நிலைப் பள்ளிகளில், உடற்கல்வி இயக்குனர் நிலை ஒன்றில் 630 பேரும், இயக்குனர் நிலை இரண்டில் 3,500 பேரும், உயர்நிலைப் பள்ளிகளில் 146 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர்.
இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்களுக்கு தவறாமல் உரிய காலத்தில் பதவி உயர்வு உண்டு. உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மட்டும், எதுவும் கிடையாது. போதிய உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் செய்யப் படாததால், திறமையான மாணவர்களை அடையாளம் காண முடியவில்லை.
சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ், அனைத்துப் பாடங்களுக்கும் பாடப் புத்தகங்கள் இருக்கின்றன. உடற்கல்விக்கு மட்டும் பாடப் புத்தகம் கிடையாது. ஏற்கனவே ஒரு முறை, பாடப் புத்தகம் எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டது. உடற்கல்வி ஆசிரியர்கள் குழு, பாடப் புத்தகங்களையும் எழுதிக் கொடுத்தது. ஆனால், அது என்ன ஆனது என்றே தெரியவில்லை.