பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய கடலூர் மாவட்டம், கல்வியிலும், மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. மக்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை முறையே, இதற்கு முக்கிய காரணம். கிராமங்களைச் சேர்ந்த இம்மாவட்ட மாணவர்கள், தங்களது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு விவசாய வேலைகளை செய்து கொண்டே படிக்க வேண்டியுள்ளது.
கிராமங்களில் இருந்து வெகு தொலைவிற்கு படிக்கச் சென்று வர வேண்டியுள்ளதால் வீட்டில் படிப்பதற்கு அதிக நேரம் செலவிட முடியாததும் முக்கிய காரணமாகும். கடந்த மாதம் நடந்த அரையாண்டுத் தேர்வை முடித்த மாணவர்கள், வரும் மார்ச், 8ம் தேதி துவங்கவுள்ள, பிளஸ் 2 பொதுத்தேர்விற்கு ஆயத்தமாகி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 30ம் தேதி ஏற்பட்ட, தானே புயலால் மாவட்டமே சின்னாபின்னமானது. கிராமப்புற மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து, பரிதவித்து வருகின்றனர். மின்சாரம் மற்றும் குடிநீர் வினியோகம், முற்றிலும் துண்டிக்கப்பட்டது. பெரும்பாலான பள்ளிக் கட்டடங்கள் சேதமடைந்ததால், அரையாண்டு விடுமுறை முடிந்து, பள்ளிகள், 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 8ம் தேதி துவங்கும் எனவும், செய்முறைத் தேர்வு, வரும் பிப்ரவரி, 5ம் தேதி துவங்கும் எனவும், தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில், 9ம் தேதி, பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பிற மாணவர்களுக்கு, 17ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த, பிளஸ் 2 மாணவர்களுக்கு, 9ம் தேதி பள்ளிகள் திறந்தபோதும், நகரப் பகுதி மாணவர்கள் மட்டுமே, பள்ளிக்கு வந்தனர். வாழ்வாதாரத்தை இழந்த கிராமப்புற மாணவர்கள் பள்ளிக்கு வருவது வெகுவாக குறைந்தது. அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பாத நிலையில், வரும், 5ம் தேதி துவங்கவுள்ள செய்முறைத் தேர்வில், முழுமையாக பங்கேற்க முடியுமா என்ற அச்சம், கிராமப்புற மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. புயலால், கிராமப்புறங்களில் உள்ள வீடுகளின் கூரைகள் பிய்ந்து, புத்தகங்கள், ரெக்கார்ட் நோட்டுகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், செய்முறைத் தேர்வில் பங்கேற்றாலும் அதன்பிறகு, தேர்விற்கு மிகக்குறைந்த நாட்களே உள்ளதால், அதற்குள் தேர்விற்குத் தயாராக முடியுமா, அப்படியே தேர்வு எழுதினாலும் தேர்ச்சி பெற முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இவர்களின் அச்சத்தை போக்கவும், பொதுத்தேர்வை எதிர்கொள்ள தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்த பிறகு, ஏப்ரல் மாதத்தில் செய்முறைத் தேர்வை நடத்தினால், இம்மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் உயர வாய்ப்பாக இருக்கும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.